புதிய கல்வி திட்ட கொள்கையை வகுக்கும் நடவடிக்கையில் உயர்கல்வித்துறை

அக் 13,2015:- உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் புதிய கல்வி திட்ட கொள்கையை வகுக்கும் நடவடிக்கையில் உயர்கல்வித்துறை ஈடுபட்டுள்ளது.
அதன் ஒரு கட்டமாக 12 அம்சங்கள் இடம்பெற்ற கோரிக்கைகளை பல்கலை, கல்லூரிகளுக்கு அனுப்பி அது குறித்து கருத்தரங்கு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 500 பல்கலை கழகங்கள், 37 ஆயிரம் கல்லூரிகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பட்டதாரிகள் வெளியேறுகின்றனர். கல்வியில் சிறந்த மாநிலங்களாக திகழ்கிறோம், என உயர்கல்வியில் பெருமைகளை பெற்றிருந்தாலும், உலக அளவில் முன்னணி பல்கலை கழகங்கள், கல்லூரிகளின் தர வரிசையில் இந்திய கல்வி நிறுவனங்கள் இடம்பெறுவதில்லை. வளர்ச்சி அடைந்த நாடுகளில் உயர்கல்வி என்பது படித்து முடித்து அவர்கள் செய்யும் தொழிலையும், வாழ்க்கை முறையையும் அடிப்படையாக கொண்டே அமைக்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை உயர்கல்வி கல்லூரி,பல்கலை கழகங்கள் அளவிலேயே மாணவர்களுக்கு பயன்படுகிறது. அதன்பிறகு அவர்கள் வெளியே சென்று பார்க்கும் வேலைக்கும், படிப்புக்கும் சம்பந்தம் இல்லை. மாணவர்களின் வேலைவாய்ப்பு திறனை பொறுத்தே பல்கலை கழகங்களின் தரம் மதிப்பிடப்படுகிறது. முன்னணி நிறுவனங்கள் பெரிய அளவில் தொழில்களை தொடங்கும்போது, அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை. திறன் குறைந்தவர்கள் புறக்கணிக்கப் படுகின்றனர். இந்நிலை மாறி அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும்.
மாணவர்கள் அதற்கு ஏற்ப தங்களை தயார் செய்வதற்கான கல்வியை கல்லூரி, பல்கலை கழகங்கள் வகுத்து செயல்பட வேண்டும், என்பதை வலியுறுத்தி உயர்கல்வித்துறை ஒவ்வொரு பல்கலை, கல்லூரிக்கும் 12 அம்சங்கள் கொண்ட சுற்றறிக்கை அனுப்பி, அது தொடர்பான கருத்தரங்கு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.