கம்பரும் ஔவையாரும் நேரில் சந்தித்த போது...

ஒரு சமயம் கம்பர் ஔவையார் அவர்களை சந்திக்க நேர்ந்தது. முன்னர் ஔவையார் தன்னை பற்றி அரசனிடம் கூறியதை அறிந்திருந்த கம்பர் ஔவையார் அவர்களை அவமானப்படுத்த எண்ணி பின்வரும் புதிரினை கேட்டார்.
ஒரு காலடீ நாலிலைப் பந்தலடீ
எதற்கு ஒரு கால் இருக்கும் ஆனால் நான்கு கூரை (பந்தல்) இருக்கும் என்பதே கேள்வி. நான்கு இலைகள் சேர்ந்து செய்யப்பட்ட கூரைபோல காட்சி தரும் "ஆரை" என்னும் கீரைக்கு ஒரே ஒரு அடிப்பகுதிதான் இருக்கும். "ஆரை" கீரையைத்தான் கம்பர் இப்படி விடுகதையாக கேட்டார்.
"டீ" என்கின்ற எழுத்து பெண்களை மரியாதையின்றி மற்றும் தரக்குறைவாக குறிக்க பயன்படுத்தப்படும் எழுத்தாகும். கம்பர் அந்த எழுத்தினை சொல்லில் பயன்படுத்தி விடுகதையினை கேட்டார்.
இதை கேட்டு மிகுந்த சினமுற்ற ஔவையார்,
எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே,
மட்டில் பெரியம்மை வாகனமே, - முட்டமேல்
கூரையில்லா வீடே, குலராமன் தூதுவனே,
ஆரையடா சொன்னாயடா
என்று பதிலளித்தார்.
இதில் முதல் வரியில் வரும் " எட்டேகால்" என்பதை எட்டு + கால் அதாவது "8 + 1/4" என்று பிரித்து படிக்க வேண்டும். அப்படி படித்தால் "8" என்பதற்கு உரிய தமிழ் எண் " அ" அதே போல் கால் (Quarter) 1/4 - என்னும் பின்னத்துக்கு உரிய தமிழ் எண் " வ ".
(1/4 cutting என்று ஒரு படத்திற்கு பெயர் வைத்துவிட்டு பின்னர் வரிவிலகிற்காக தமிழில் "வ" கட்டிங் என்று பெயர் வைத்ததை வேண்டுமானால் இங்கே புரிவதற்காக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்)
ஆக, எட்டேகால் = எட்டு + கால்
(எட்டு) 8 = அ
(கால் )1/4 = வ
எனவே இப்போது எட்டேகால் = அவ
இப்போது மேற்கண்ட பாடலின் முதல் வரியை படியுங்கள் .
'அவ' லட்சணமே என்று பொருள் வருகிறதல்லவா ?
எமனேறும் பரியே - எருமைக்கடா
மட்டில் பெரியம்மை வாகனமே - மூத்த தேவி என்னும் மூதேவியின் வாகனமான கழுதையே
முட்டமேல் கூரையில்லா வீடே - மேல் கூரையில்லா வீடு அதாவது குட்டிச்சுவரே
குலராமன் தூதுவனே - ராமன் தூதுவனே அதாவது குரங்கே
கடைசி சொல்லான 'ஆரையடா சொன்னாயடா ' என்பதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் வரும்.
" நீ ஆரைக் கீரையைத்தான் சொன்னாய் அடா! " என்பது ஒரு பொருள்.
இதில் இப்போது 'சொன்னாய்' என்பதை மட்டும் பிரித்தால்
'சொன்னாய்' = சொன்ன + நாய் என்று நாயயையும் குறிக்கும் அல்லது
யாரை பார்த்து சொன்னாய் என்று கேட்பது போலவும் குறிக்கும்.
தம்மால் எளிதாக செய்யக்கூடிய செயலினை செய்துவிட்டு தாம் பெரியவர் என்று கூற இயலாது என்று ஔவையார் தனது பாடல் மூலம் எடுத்துரைத்தார்...
கம்பரின் பெருமையை காப்பாற்ற, அரசன், பிறப்பிலேயே கம்பர் ஒரு கவிஞர் என்று கூற, அதற்கு ஔவையார்,
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் நித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம்.
வரைந்து பழகினால்தான் சிறந்த ஓவியம் வரையமுடியும், பேசி பழகினால்தான் தமிழில் சிறந்த பேச்சாளராக திகழ முடியும், படித்து பழகினால்தான் சிறந்த அறிவு உள்ளவராக விளங்க முடியும், ஒழுக்கத்துடன் நடந்தால்தான் பெருந்தன்மை உள்ளவராக வாழ முடியும். நட்பு மனப்பான்மை, கருணை உள்ளம், நன்மை செய்யும் மனப்பாங்கு ஆகியவை தவிர மற்ற அனைத்தும் பயிற்சி செய்தாலன்றி செவ்வன செய்யயியலாது. கம்பரின் கவித்திறமையும் கவி எழுதி பழகியாதால் வந்ததேயன்றி பிறப்பிலேயே வந்ததன்று என்று கூறினார் ஔவையார்...
ஔவையார் கூறியது உண்மை எனத்தெரிந்தும் கம்பரின் பெருமையை நிலைநாட்ட கவித்திரனிலும் சொல்வன்மையிலும் கம்பருக்கு நிகராக யாரும் இல்லை எனக்கூறினார்.
காணாமல் வேணதெல்லாம் கத்தலாம் கற்றோர்முன்
கோணாமல் வாய்திறக்கக் கூடாதே நாணாமல்
பேச்சுப்பேச் சென்னும் பெரும்பூனை வந்தக்கால்
கீச்சுக்கீச் சென்னும் கிளி .
பேசக்கற்றுக்கொண்ட கிளி தொடர்ந்து பேசிக்கொண்டும், பிதற்றிக்கொண்டும் இருக்கும். ஆனால் பூனையை கண்டவுடன் பேசுவதை மறந்து அலற ஆரம்பித்துவிடும். அதுபோல், சிறந்த கல்வி கற்றோ அல்லது சிறந்த செயல் செய்தபின்போ நம்மை சுற்றியுள்ளவர் மத்தியில் அதை பற்றி பேசலாம், ஆனால், சான்றோர் முன் தன்னடக்கத்துடன் நடந்து கொள்ளவேண்டும், இல்லையேல், பூனையை கண்ட கிளியின் நிலைமைக்கு அவர்கள் தள்ளப்படுவர் என்று பாடினார்.