மரம் வெட்டிய மாணவர்கள்: பெற்றோர்கள் அதிருப்தி

அக் 13,2015:- தொண்டி அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளி வளாகத்தில் உள்ள காட்டுகருவேல மரங்களை மாணவர்கள் அப்புறப்படுத்தினர். தொண்டி அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளி வளாகத்தை சுற்றி கருவேல சூழ்ந்ததால் வெளியே நடமாட முடியாத நிலை ஏற்பட்டது.
மரங்களை வெட்டி அப்புறப்படுத்த கல்வித்துறை அதிகாரிகள் முன்வரவேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தினர். நடவடிக்கை எடுக்காததால் வேறு வழியின்றி மாணவர்களை வைத்தே மரங்களை வெட்டி அப்புறப்படுத்த ஆசிரியர்கள் முடிவு செய்தனர். நேற்று காலை முதல் மதியம் வரை பாடவேளையில் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் மாணவர்கள் ஈடுபடுத்தப் பட்டனர். அரையாண்டு தேர்வு நெருங்கிவரும் நிலையில் மரம் வெட்டும் பணியில் மாணவர்களை ஈடுபடுத்திய சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மாணவர்கள் கூறுகையில்,"" நாங்கள் 9ம் வகுப்பு படித்து வருகிறோம். பள்ளியை சுற்றிலும் உள்ள மரங்களை வெட்டி அப்புறப்படுத்த ஆசிரியர்கள் கூறியதால் வகுப்புகளை புறக் கணித்துவிட்டு இப்பணியில் ஈடுபட்டோம்,'' என்றனர்.
பெற்றோர் ஒருவர் கூறுகையில், ""கூர்மையான முட்கள் உள்ள காட்டு கருவேல மரங்களை மாணவர்களை வைத்து வெட்டி அப்புறப்படுத்துகின்ற ஆபத்தான பணியை பள்ளி நிர்வாகம் தவிர்த்திருக்கலாம். மரம் வெட்டும் தொழிலாளர்கள் மூலம் மரங்களை வெட்டி அகற்றியிருக்கலாம்,'' என்றனர்.