விழிப்புணர்வு அழகின் விலை உயிரா?

அழகின் விலை உயிரா?

பதிவர்: நிர்வாகி, வகை: விழிப்புணர்வு  
படம்

ஜூலை.04, 2015:- ‘ஆர்த்தி அகர்வால்... இது மிகவும் வருத்தமாக உள்ளது. லைப்போசக்‌ஷன் செய்ததுதான் உன்னுடைய மரணத்துக்குக் காரணம் என்பதைக் கேள்விப்படும்போது அதைவிட வருத்தமாக உள்ளது. உன் ஆத்மா சாந்தியடையட்டும்!’-  நடிகர் விஷாலின் அண்ணியும் நடிகையுமான ஸ்ரேயா ரெட்டி தனது ட்விட்டரில் கடந்த ஜூன் 6ம் தேதி எழுதியிருக்கும் இரங்கல் இது. தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஆர்த்தி அகர்வால் ‘பம்பரக்கண்ணாலே’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமானவர்.

திருமணத்துக்குப் பிறகு அமெரிக்காவில் வசித்து வந்த ஆர்த்தி, எடை குறைப்புக்காக அமெரிக்காவின் அட்லாண்டிக் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் லைப்போசக்‌ஷன் சிகிச்சை செய்துகொண்டார். இப்போது அவர் உயிரிழந்ததற்குக் காரணம் அவர் செய்துகொண்ட லைப்போசக்‌ஷன்தான் என்று ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் செய்திகள் பரவி வருகின்றன. பிளாஸ்டிக் மற்றும் காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சை மருத்துவரான சதீஷ் மணிவேலிடம் லைப்போசக்‌ஷன் பற்றியும், ஆர்த்தி அகர்வால் சர்ச்சை பற்றியும் கேட்டோம்...

‘‘உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பை அகற்றும் அறுவை சிகிச்சைதான் லைப்போ சக்‌ஷன் (Liposuction). ஆனால், இது உடலின் எடையைக் குறைக்கும் சிகிச்சை என்று பலரும் நினைக்கிறார்கள். இது முற்றிலும் தவறு. உடலின் வடிவமைப்புக்குத்தான் (Body shape) லைப்போசக்‌ஷன் உதவும்.வயிற்றுப்பகுதி, கைகள், தொடை, பின்புறம், ஆண்களுக்கு மார்பகம் பெரிதாக இருப்பது போன்ற உடலின் குறிப்பிட்ட இடங்களில் கொழுப்பு தங்கியிருக்கும் பிரச்னைக்கு உணவுக் கட்டுப்பாட்டின் மூலமோ, உடற்பயிற்சியின் மூலமோ பலன் கிடைக்காது. இவர்களுக்கு லைப்போசக்‌ஷனே சிகிச்சை.

ஆர்த்தி அகர்வாலின் மரணத்தைப் பொறுத்த வரை, ‘அறுவை சிகிச்சைக்கு 6 மாதங்கள் கழித்து இறந்தார்’, ‘ஆஸ்துமா பிரச்னைதான் காரணம்’ என்று பல்வேறு விதமான செய்திகள் வருகின்றன. ஊடகங்களில் வருகிற தகவல்களின் அடிப்படையில் செய்தியாகத்தான் நமக்குத் தெரிகிறது. மருத்துவ ரீதியாக முழுமையான தகவல்கள் எதுவும் தெரியவில்லை.  லைப்போசக்‌ஷன் காரணமாக ஒருவர் உயிரிழப்பது என்பது மிகவும் அரிதானது என்பதே காஸ்மெட்டிக் சர்ஜன் என்ற முறையில் என்னுடைய கருத்து. எடை குறைப்புக்காக குடல் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் செய்யும் பேரியாட்ரிக் சிகிச்சையும் லைப்போசக்‌ஷனும் வேறு வேறு. இரண்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’’ என்கிறார்.

லைப்போசக்‌ஷன் எப்போது பிரச்னைக்கு உரியதாகலாம்?

‘‘லைப்போசக்‌ஷன் செய்துகொள்ள விரும்புகிறவரின் உடல்நிலை, எதிர்பார்ப்பு, சாத்தியக்கூறுகள் என பல விஷயங்களையும் சரியாக கணித்த பிறகே மருத்துவர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். எடையில் அடிக்கடி மாற்றம் உள்ளவர்களுக்கு லைப்போ செய்யக் கூடாது. ஒருவருக்கு நீரிழிவு இருந்தாலோ, ரத்த அழுத்தம் இருந்தாலோ அந்த அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்ட பின்னரே லைப்போ செய்ய வேண்டும். ஒருவரது உடலில் 10 லிட்டருக்கும் மேல் கொழுப்பை அகற்ற வேண்டும் என்றால் 2 தவணைகளாக முதலில் 5 லிட்டர், 6 மாதங்கள் கழித்து 5 லிட்டர் என்று எடுக்க வேண்டும். ஒரே நேரத்தில் மொத்தமாக 10 லிட்டர் கொழுப்பை அகற்றக் கூடாது.

அதிக கொழுப்பை ஒரே நேரத்தில் மொத்தமாக அகற்றும்போது ரத்த இழப்பும் அதிகமாகி தேவையற்ற விளைவுகள் உண்டாகும் அபாயம் உண்டு. லைப்போசக்ஷன் என்பது உயிர் காக்க செய்கிற அவசர சிகிச்சை இல்லை. நம்முடைய தோற்றத்துக்காக செய்யப் போகிற அழகு சிகிச்சையை அத்தனை அவசரப்பட்டு செய்து ஆபத்தில் மாட்டிக் கொள்ள வேண்டியதில்லை. அழகை விட பாதுகாப்பு முக்கியமானது என்பதால் நோயாளிகள் மருத்துவரை நிர்ப்பந்தப்படுத்தக் கூடாது.’’

லைப்போசக்‌ஷனில் எந்த ஆபத்தும் இல்லையென்கிறீர்களா?

‘‘லைப்போசக்‌ஷன் 100 சதவிகிதம் பாதுகாப்பானது என்று சொல்லவில்லை. எல்லா மருத்துவ அறுவை சிகிச்சைகளுக்குமே பக்கவிளைவுகள் உண்டு. லைப்போ சக்‌ஷனிலும் ரத்த இழப்பு, அறுவை சிகிச்சை செய்த இடத்தில் நீர்கோர்த்துக் கொள்கிற Seroma என்கிற நிலை, நோய்த்தொற்று போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். தேவையற்ற விளைவுகளைத் தவிர்க்க, நம்பகமான மருத்துவரிடமோ குடும்ப நல மருத்துவரிடமோ ஆலோசனை பெற வேண்டும். அறுவை சிகிச்சை செய்துகொள்ளப் போவது தரமான மருத்துவமனையா,  அறுவை சிகிச்சை செய்கிறவர் தகுதி பெற்ற பிளாஸ்டிக் மற்றும் காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சை மருத்துவரா என்பதை ஆராய்ந்த பின்னரே அதற்குத் தயாராக வேண்டும்..!’’

இப்படித்தான் நடக்கிறது லைப்போசக்‌ஷன்!

லைப்போசக்‌ஷனை பொறுத்தவரை நம்முடைய உடலை நான்கு பாகங்களாகப் பிரிக்கிறார்கள். முதலில் தோல் பகுதி, அதன் கீழ் ஃபேசியா(Fascia), அதற்குக் கீழே தசைகள், கடைசியாக எலும்பு. இதில் தோலுக்கும் ஃபேசியா பகுதிக்கும் இடையில்தான் தேவையற்ற கொழுப்பு தங்கியிருக்கும். இந்த கொழுப்பையே லைப்போசக்‌ஷனில் அகற்றுகிறார்கள். ஒரு சிறு இடத்தில் மட்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால், லோக்கல் அனஸ்தீஷியா கொடுத்தாலே போதுமானது. பெரிய இடமாக இருந்தால் ஜெனரல் அனஸ்தீஷியா கொடுக்க வேண்டியிருக்கும்.

அதன்பின், உடலில் இருந்து உறிஞ்சி எடுக்கும் வகையில் உடலின் கொழுப்பை கரைப்பதற்காக Tumescent என்ற மருந்தை ஊசியின் மூலம் செலுத்துவார்கள். பல மருந்து களின் கலவையான இந்த Tumescent அறுவை சிகிச்சையின்போது ரத்த இழப்பு அதிகம் ஏற்படாமலும் பாதுகாக்கும். அதன் பிறகே ஒரு செ.மீ. அளவுக்குத் துளையிட்டு Cannula என்ற ஊசிபோன்ற நீண்ட குழாய் மூலம் கொழுப்பு உறிஞ்சி எடுக்கப்படுகிறது.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு...

அறுவை சிகிச்சைக்குப் பிறகு தோலுக்குக் கீழ் உள்ள கொழுப்பு செல்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். அதனால் கொழுப்பு மீண்டும் சேர்வதற்கான வாய்ப்பு குறைவு தான். அறுவை சிகிச்சைக்குப் பிறகு மூன்று மாதங்களாவது Pressure garment என்ற உடையைப் பயன்படுத்த வேண்டும். மார்பில் கொழுப்பு அகற்றப்பட்டிருந்தால் பனியன் போல இந்த உடையை அணிந்துகொள்ள வேண்டும். அப்போது தான் எதிர்பார்க்கிற உடல் வடிவம் கிடைக்கும்.

உணவியல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், சரும மருத்துவர், நாளமில்லா சுரப்பிகள் மருத்துவர், மயக்க மருந்து மருத்துவர் என்று ஒரு குழுவின் முயற்சிதான் லைப்போசக்‌ஷன். இந்தக் குழுவுக்கு ஒரு கேப்டனாக இருந்தே லைப்போசக்‌ஷனை காஸ்மெட்டிக் சர்ஜன் செய்கிறார். சிகிச்சைக்குப் பிறகு உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்ற பல விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பதால்  ஒரு வருடம் வரை நோயாளியும், மருத்துவரும் தொடர்பில் இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்