புது கருவி கண்டுபிடிப்பு: பரமக்குடி அரசு பள்ளி மாணவர் சாதனை

செப் 20,2015:- பரமக்குடி அரசு பள்ளி மாணவர், மாற்றுத்திறனாளிகள் மின் சாதனங்களை இயக்க உதவும் வகைணயில் புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்து தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிக்கு தேர்வாகியுள்ளார்.பரமக்குடி அருகே உள்ள கலையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 9 ம் வகுப்பு படிக்கும் மாணவர் வி.அருண்பிரகாஷ். இவர், மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையே நடந்த புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக்கான (2014-15) கண்காட்சியில் சாதனை படைத்து, தேசிய கண்காட்சிக்கு தேர்வு கொள்ளவுள்ளார்.
மாணவரின் வழிகாட்டியான ஆசிரியை நிர்மலா தேவி கூறியதாவது: மாணவர் அருண் பிரகாஷ் கை, கால், கண் இல்லாத மாற்றுத்திறனாளிகள் வீட்டில் உள்ள மின்உபகரணங்களை இயக்க உதவும் புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்து உள்ளார். இக்கருவி அகச்சிவப்பு கதிர் (ஐ.ஆர்.,) மூலம் இயங்கும் வகையில் தலையில் ஒரு "ஹெல்மெட்' மாட்டப்படும். இதிலிருந்து வரும் கதிர்கள் மின்விசிறி, மின்விளக்குகளுடன் இணைப்பு கொடுக்கப்படும்.
மாற்றுத்திறனாளி ஒருவரின் தலையில் இக்கருவியை பொருத்திய பிறகு அவர், தலையை அசைத்தால் மின்சார் உபகரணம் இயங்கும். மீண்டும் அசைத்தால் நிற்கும். இதன் மூலம் அலாரம் உள்ளிட்டவைகள் கூட இயக்க முடியும். ஆபத்து காலங்களில் மற்றவர்களின் உதவியை பெற இக்கருவி உதவும். இந்த கருவியை சட்டை பட்டனில் மாட்டிக் கொள்ளும் வகையிலும் தயாரிக்க முடியும்.
ஆண்டுதோறும் 6 முதல் 10 ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளின் அறிவியல் கண்டு பிடிப்புகளுக்கான கண்காட்சியில் இம்மாணவரின் கண்டுபிடிப்பு ராமநாதபுரம் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றது. நாமக்கல் மாவட்டம் மல்வசமுத்திரத்தில் நடந்த மாநில போட்டியில் 32 மாவட்டத்தைச் சேர்ந்த 2400 படைப்புகள் இடம்பெற்றன. இதில் இம்மாணவர் உட்பட42 பேர்களின் படைப்புகள் தேர்வாகி உள்ளது. தொடர்ந்து அக்., 26, 27 ல் டில்லி பிரகதி மைதானத்தில் நடக்கவுள்ள தேசிய போட்டியில் இம் மாணவரின் படைப்பு இடம் பெறவுள்ளது. இதில் அனைத்து மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்வர், என்றார்.