தமிழ்நாடு தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுப்பதிலே தமிழக கல்வித்துறைக்கு என்ன தயக்கம்?

தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுப்பதிலே தமிழக கல்வித்துறைக்கு என்ன தயக்கம்?

பதிவர்: நிர்வாகி, வகை: தமிழ்நாடு  
படம்

சென்னை, ஏப்.17, 2015:-  கல்வி உரிமைச் சட்டத்தின்படி தமிழகத்தின் தனியார் பள்ளிகளில் முறையான மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதில்லை. அதை தட்டிக் கேட்பதற்கு கல்வித்துறையும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பரபரப்பான குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.
 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
 
"கடந்த மத்திய காங்கிரஸ் அரசு 6 முதல் 14 வயது நிரம்பிய அனைவருக்கும் கட்டாய கல்வி கொடுக்கும் வகையில் கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வந்தது. இச்சட்டத்தின்படி அனைத்து தனியார் பள்ளிகளும் ஒவ்வொரு வகுப்பிலும் 25 சதவீத இடங்களில் ஏழை எளிய மாணவர்களை சேர்க்க வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது.
 
இதற்கான கல்வி கட்டணத்தை அரசே செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தமிழகத்தின் தனியார் பள்ளிகளில் முறையான மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதில்லை. அதை தட்டிக் கேட்பதற்கு கல்வித்துறையும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
 
இச்சட்டத்தின்படி பெற்றோர் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க பெரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆனால் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்த்துக் கொள்ளாமல், தனியார் பள்ளிகள் பல்வேறு சால்ஜாப்புகளை கூறி இழுத்தடித்து வருகின்றன. இதனால் பெற்றோர் எதிர்கொள்கிற வேதனைகளை வார்த்தைகளால் வடிக்க இயலாது.
 
இதுகுறித்து தமிழக அரசு கடுகளவும் கவலைப்படுவதாக தெரியவில்லை. மத்திய கல்வி சட்டத்தின்படி 25 சதவீத ஒதுக்கீட்டை நிறைவேற்றாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுப்பதிலே தமிழக கல்வித்துறைக்கு என்ன தயக்கம்? ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
 
கடந்த 2013–14 கல்வியாண்டில் 25 சதவீத ஒதுக்கீட்டின்படி தமிழகத்தில் மொத்த இடங்கள் 1 லட்சத்து 43 ஆயிரம். ஆனால் 16 ஆயிரத்து 194 இடங்கள்தான் நிரப்பப்பட்டிருக்கின்றன. 25 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டிய தனியார் பள்ளிகள் 8.8 சதவீதம்தான் ஒதுக்கியிருக்கின்றன.
 
தமிழகத்திலுள்ள 10 ஆயிரத்து 758 தனியார் பள்ளிகளில் 1392 பள்ளிகள் ஒரே ஒரு மாணவரைத்தான் 25 சதவீத ஒதுக்கீட்டின்படி சேர்த்துள்ள கொடுமை நடந்திருக்கிறது.
 
தமிழ்நாட்டில்தான் இவ்வளவு குறைவான மாணவர்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். இச்சட்டப்படி பள்ளிகளுக்கு சேர வேண்டிய முழுக்கட்டணத்தை மத்திய அரசுதான் வழங்குகிறது. இந்நிலையில் இச்சட்டத்தின்படி ஒதுக்கீட்டை இந்த அரசு நிறைவேற்றவில்லை" என்று கூறியுள்ளார்.

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்